La. Sa. Ramamrutham
மாஸு, நினைவிருக்கிறதா? நாம் சந்தித்த புதுசு. எனக்கு ராயப்பேட்டையில் ஜாகை. நீங்கள் டவுன். இரவு எட்டுமணி வாக்கில் வருவீர்கள் - நீங்கள், தாத்து, செல்லம், ரங்கநாதன். எல்லோரும் பேசிக்கொண்டே மரீனா வழியே நடந்து, தங்கசாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன் - பூரி, பாஜி; சேறாட்டம் பால், அதன்மேல் கணிசமாக மிதக்கும் ஏடு. அப்படியே பேசிக் கொண்டே கோவிந்தப்ப நாய்க்கன் தெரு: விளக்கு வெளிச்சத்தில், இரவு பகலாகியிருக்கும். மார்வாரிப் பெண்டிர், வளையல்களும், பாதங்களில் தண்டையும், கொலுசும் குலுங்க, விதவிதமான வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, தெருவில் கும்மியடிக்கையில் - இது சௌகார்பேட்டையா, பிருந்தாவனமா? அப்படியே பேசிக்கொண்டே, கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்குக் குறுக்கே வெட்டி, காந்தி - இர்வின் சாலை வழியே பேசிக் கொண்டே மீண்டும் மரீனா பீச்; நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. பேசிக்கொண்டே, பைக்ராப்ட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ்ஹவுஸ் ரோடு, பெஸண்ட் ரோடில் என் வீட்டில் என்னை விட்டுவிட்டு, மணி இரண்டாகிவிடும். பிரியாவிடையில் டவுனுக்குத் திரும்புவீர்கள். நம் அத்தனை பேருக்கும் அதென்ன பைத்யக்காரத்தனமோ?